வறுமையின் கொடுமை: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை
சென்னை: குடும்பத்தலைவர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வறுமை சூழ்நிலையால் 3 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அருகே மணலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஜோதி, வேதகிரி, ஜெபகனி ஆகியோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தலைவரான ஜெபகனிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. எனவே குடும்பத்தில் வறுமை சூழல் காரணமாக விரக்தியடைந்த மூன்று பேரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தற்கொலைகள்
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
கடந்த ஜூலை மாதம் சென்னை கொளத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொளத்தூர் வி.வி.நகர் 2வது தெருவைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் சாய்ராம் தூக்கிட்டுக் கொண்டும் , அவரது மனைவி மற்றும் மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகரிக்கும் தற்கொலைகள்
ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்கொலையில் 23.5 சதவீதத்துடன் தமிழகம் மாநில அளவில் முதலிடத்திலும், மாநகர அளவில் சென்னையும் முதலிடத்தை வகிக்கின்றது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015ம் ஆண்டு அறிக்கையிலும் தமிழகம் மற்றும் சென்னையே முதலிடம் வகிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் குறையாமல் சீராக அதிகரித்து வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மனஅழுத்தம்
சமூக பொருளாதார காரணிகள், குடும்ப சூழல், வேலை பார்க்கும் இடங்களில் இருக்கின்ற நெருக்கடி உள்ளிட்டவை தற்கொலையை நோக்கி மனிதர்களை திருப்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நகர மயமாதலுக்குப் பிறகான சூழல் முற்றிலும் மாறிய நிலையில் புற சூழல் மனிதர்களை அழுத்தமானதொரு மன நிலைக்கு தள்ளிவிடுகின்றது.