திருவள்ளூர் அருகே விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் மூவர் பலியாகி உள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஐயர்கண்டிகை கிராமத்தில் சாலையோர உணவுக்கடை நடத்தி வந்தவர் செல்வம், இவரது மனைவி ஜெயந்தி, மகள்கள் மகாலட்சுமி, மோனிஷா, தாய் வள்ளியம்மாளோடு வசித்து வந்தார்.

கடையை மூடிவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்த செல்வம், விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்தினை கடையிலிருந்து வாங்கி வந்து அனைவருக்கும் பாலில் கலந்து கொடுத்துள்ளார். விஷம் குடித்த பிறகு வலி பொறுக்காமல் பெரிய மகள் மகாலட்சுமி, அருகில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்க்கு போன் செய்து வீட்டில் நடந்தவற்றை அழுது கூறி இருக்கிறார்.
இதனையடுத்து அங்கு வந்த உறவினர்களை கதவை உடைத்து, மயங்கிய நிலையில் இருந்த 5 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிகிச்சை பலனின்றி தாய் வள்ளியம்மாள் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து செல்வமும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் மகாலட்சுமி மற்றும் மோனிஷா ஆகியோர் திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் தற்கொலை முயற்சிக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது கடன் தொல்லையா வேறு ஏதேனும் காரணமா என கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications