உளுந்தூர்பேட்டையில் அதிகாலை "கத்திய" ஆடுகள்.. அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்.. கள்ளக்குறிச்சி துள்ளுது
கள்ளக்குறிச்சி: ரம்ஜான் பண்டிகை வருவதால், கால்நடை சந்தைகள் தமிழகத்தில் பிஸியாகியிருக்கின்றன. அந்தவைகயில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவை.. இதுமாதிரியான கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக கைகொடுத்து உதவிகொண்டிருக்கிறது.
அந்தவகையில், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, நெல்லை மேலப்பாளையம் சந்தை, வேலூர் கேவி குப்பம் சந்தை போன்றவைகளில் ஆடுகளை வாங்குவதற்காகவே பொதுமக்கள் இந்த சந்தைகளுக்கு திரண்டுவருவார்கள்..

கால்நடை சந்தைகள்: அதிலும், பண்டிகை காலத்தில் கூடும் கால்நடை சந்தைகளில், விற்பனைகள் அதிகமாவது இயல்பான விஷயமாகும்.. இதுபோன்ற விசேஷ நாட்களில், செம்மறி ஆடு, வெள்ளாடுகள் சந்தைக்கு கொண்டு வந்தாலும், வெள்ளாடுகளுக்குதான் அதிக கிராக்கி இருந்து வருகிறது.. வெள்ளாடுகளின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்..
வருகிற ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், கால்நடை சந்தைகள் படுபிஸியாகிவிட்டன.. 2 நாட்களுக்கு முன்புகூட வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை லோடு வேன் மூலம் விவசாயிகள் ஏற்றி வந்தார்கள்.
ஆடுகள் விலை: சில ஆடுகள் விலை ரூ50 ஆயிரம், ரூ.1 லட்சம் என்று விலை போயிருக்கிறது. அதிலும் "ஜமுனாமுரி" ரக ஆடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியிருக்கிறது. சென்னையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் செம்மறி ஆட்டினை 1 லட்சத்து 48 ஆயிரத்துக்கு வாங்கிக்கொண்டு போனது வேலூரில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதோ நேற்று உளுந்தூர்பேட்டை சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடந்து, பலரையும் வியக்க வைத்திருக்கிறது.. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இதில், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். தற்போது பக்ரீத் பண்டிகை காரணமாக, ஆட்டு சந்தை களைக்கட்டி வருகிறது.
ஆட்டுச்சந்தை: எப்போதுமே பக்ரீத் பண்டிகைக்கு முன்பு, உளுந்தூர்பேட்டையில் சிறப்பு ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். அந்தவகையில் இந்த வருடத்துக்கான ஆட்டுச் சந்தை நேற்று நடந்தது.. அதிகாலை 2 மணிக்கே ஆடுகள் சந்தைக்கு வந்துவிட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், விவசாயிகளும் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். அதாவது, 6,000 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தார்களாம்.
4 மணி முதல் ஆடுகள் விற்பனை சூடுபிடிக்க துவங்கியது.. விழுப்புரம், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம், வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்குவதற்காக சந்தையில் குவிந்தனர்.
ஆச்சரியம்: வெறும் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடந்ததாக ஆட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள். ஒரு ஆடு 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியிருக்கிறது.. வழக்கத்தைவிட கூடுதலான ஆடுகள் வந்ததுடன், விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் கால்நடை விவசாயிகள்.












Click it and Unblock the Notifications