மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் 241 பேர் கைது
நாகை: வேதாரண்யத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 241 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேதரத்தினம் உள்ளிட்ட 18 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேதாரண்யத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த அமைப்பினர் திருத்துறைப்பூண்டி அருகே வந்தபோது போலீஸார் வேதாரண்யம் செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி காமராசர் சிலை அருகே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு, காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.கண்ணதாசன் உள்ளிட்ட போலீஸார், பி.ஆர்.பாண்டியன், மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 42 பெண்கள் உள்ளிட்ட 241 பேரை கைது செய்தனர்.