குறைந்துவரும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் : நெல்லை விவசாயிகள் கவலை
வடகிழக்குப் பருவமழை குறைந்துபோனதால் நெல்லை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை :வடகிழக்கு பருவமழை திடீரென காணாமல் போனதால் அதனை பெருமளவில் நம்பி இருந்த நெல்லை விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் தேவையை பாபநாசம் அணை நிறைவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில் இந்தாண்டு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் நல்ல மழையை கொடுத்தது.
இந்த மழையின் மூலம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை தாண்டியது. கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 103 அடியை தொட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக அணை பகுதியில் மழை இல்லை. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 99.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.55 அடியாக உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை இல்லை. இருப்பினும் கருப்பா நதியில் 15மிமீ, அடவி நயினார் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருமழையைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நீடிக்கும். அந்த கால கட்டத்தில் தான் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்புவது வழக்கம். கடந்தாண்டு வடகிழக்கு பருமழை கைவிட்டாலும் இந்தாண்டு தொடக்கத்திலேயே மழை பெய்த போதிலும் அது தொடரவில்லை என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.