ராஜ்யசபா தேர்தல்: 6 இடத்திலும் அதிமுக போட்டி - பாத்திமா பாபு, பொன்னையனுக்கு சீட்?
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. டிவி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான, சமீபத்தில் அதிமுகவில் இணைந்த பாத்திமா பாபுவுக்கும் சீட் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் காலியாகும் 6 இடங்களுக்கும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களுக்குப் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் 5 பேரை அதிமுகவால் சுய பலத்துடன் தேர்வு செய்ய முடியும். 6வது இடத்திற்குரியவரை, எந்தக் கட்சியாலும் சுய பலத்துடன் தேர்வு செய்ய முடியாத நிலை இருக்கிறது. இருப்பினும் திமுக தனது வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது 6 இடத்திலும் அதிமுக போட்டியிடும் என்று தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் பொன்னையன், டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, ஆதி ராஜாராம், டி.ஆர். அன்பழகன், தங்கமுத்து, தமிழ் மகன் ஹுசேன் ஆகியோரை வேட்பாளர்களாக அதிமுக அறிவிக்கலாம் என்று கட்சித் தலைமைக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல முத்துக்கருப்பன் என்ற பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன. எனவே இந்த 7 பேரிலிருந்து 6 பேருக்கு அதிமுக தலைமை சீட் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications