ஆளுநர் ஆர்என் ரவியின் படத்துக்கு செருப்பு மாலை.. அவமதித்தவர் மீது வழக்கு.. பாஜகவினர் மீதும் ‛கேஸ்’
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செருப்பு மாலை அணிவித்தவர் மற்றும் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. திராவிடம் குறித்து விமர்சனம் செய்யும் ஆர்என் ரவி, சனாதன தர்மம் பற்றி பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். மேலும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசேதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்என் ரவி காலம் தாழ்த்துவதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விஷயங்களில் தான் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. சமீபத்தில் கூட ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் சேலம் மாவட்டம் பஸ் நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பாஜகவினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் ஆர்என் ரவியை அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவியின் படத்தை அவமதித்ததாக கூறி கலீல் ரஹ்மான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவத்தை கண்டித்து போராட்டம் செய்த பாஜகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி பாஜகவினர் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications