சென்னை டூ ராமேஸ்வரம் ரயிலில் திடீர் தீ... பயணிகள் தப்பினர்!
ராமேஸ்வரம்: சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் 2 மணி நேரம் தாமதமானது.
சென்னையிலிருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சிவகங்கை அருகே 7 கி.மீட்டர் தொலைவில் வந்தபோது, அதன் எஸ் 2 பெட்டியில், ரயில் சக்கரத்தில் உராய்வினால் ஏற்பட்ட தீ பிடித்தது. இதையடுத்து ரயில் சிவகங்கையில் நிறுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயிலில் பயணம் செய்த சரவணன் என்பவர் கூறுகையில் சென்னையிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு ரயில் புறப்பட்டது. இன்று காலை ரயிலானது காரைக்குடி அருகே வரும் போது ரயில் பெட்டிகளில் எஸ் 2 கோச்சில் இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டியில் கீழ் உள்ள சக்கரத்தில் உராய்வினால் தீ பிடித்துள்ளது.
இந்த தீயானது கோச்சிலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் கூறிய பின்னர் அவர் ரயில்வே துறை காவலரிடம் கூறி சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தீயை அணைத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த திடீர் தீ விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் என்றார்.