மீன்பிடி தடைக்காலம் எதிரொலி.. மீன்கள் விலை கிடுகிடு உயர்வு.. அசைவ பிரியர்கள் அதிர்ச்சி!
மீன்பிடி தடைக்காலத்தால் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் நெல்லை மாவட்டத்தில் மீன்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குளத்தூர் அடுத்துள்ள தருவைகுளத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டு படகுகள் உள்ளன. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் மீன்படித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.
நாட்டு படகில் பிடித்து வரும் மீன்களே தற்போது மார்க்கெட்டுக்கு வருகிறது. இதில் கருப்பு களிங்கன், பச்சை களிங்கன் போன்ற முதல் வகை மீன்கள், கலப்பு மீன்கள் என்று குறைந்த அளவே மீன்கள் வரத்து உள்ளது. இதில் ஊளி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.150க்கு விற்பனையான முறல் வகை மீன்கள் ரூ.250 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மீன்பிடி தடைக்காலம் முடியும் வரை மீன்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.