திடீரென தீ பிடித்து எரிந்த பைபர் படகு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்!
தூத்துக்குடி அருகே நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவற்றில் இருந்த மீனவர்கள் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையோரமாக நாட்டு படகுகள் வழக்கம் போல் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் உள்ள மீனவர்கள் சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பார விதமாக கேஸ் டியூப்பில் பற்றிய தீயை மீனவர்கள் கவனிக்க தவறியதால் அது மளமளவென பரவி படகு தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து சுதாரித்த மீனவர்கள் உடனடியாக படகில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் படகில் எரிந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும் படகினுள் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. உரிய நேரத்தில் சிலி்ண்டரை தீயணைப்பு நிலைய ஊழியர்கள் கடலில் தூக்கி வீசியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கடற்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பற்றி எரிந்த படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் சுவடு மறைவதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது மீனவர்களிடையே பயத்தை கிளப்பியுள்ளது.