பிளாஷ் பேக் 2016: சுவாதி முதல் சோனியா வரை... ஒருதலைக் காதலுக்கு பலியான சோகம்
தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஒரு தலை காதல் சம்பவத்திற்கு பல பெண்கள் பலியாகியுள்ளனர். காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர் இளம் பெண்கள்.
சென்னை : இந்த ஆண்டு நடந்த பல கொலைகளில் பல ஒரு தலைக் காதல் விவகாரத்தை முன் நிறுத்துகின்றன . 2012ல் வெளிவந்த ஒரு சினிமாவில் ஒருதலை காதலால் பெண்ணைப் பழிவாங்க.. ஆசிட்டை ஒரு ஆயுதமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும். அந்த வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஒரு தலைக்காதல் காரணமாக ஆசிட் வீச்சு நடந்தது. சமூக சீரழிவுக்களுக்கு சினிமாவே ஒரு முழு காரணம் இல்லையென்றாலும், சினிமாவும் ஒரு காரணம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
ஒரு சினிமாவின் தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் செல்கிறது என்பதை, திரைப்பட இயக்குநர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதுடன், அத்தகைய பெண்களை எவ்வாறு படுகொலை செய்வது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இந்த சீரழிவுக்கு காரணம் ஆகும்.
ஜூன்
ஜூன் 24: சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24ம் தேதியன்று பணிக்கு செல்வதற்காக காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தார்.
ரயிலுக்காக காத்திருந்த சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபரை ஜூலை 1ம் தேதி இரவு கைது செய்தது போலீஸ். புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் மாதம் தற்கொலை செய்யவே, வழக்கு முடிவுக்கு வந்து விட்டது.
ஜூன் 27 : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக 'மார்பிங்' செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக கூறி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத நிலையில் வினுப்பிரியா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
ஜூலை
12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நவீனாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்ற செந்தில், தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீனாவை மிரட்டியுள்ளார்.
செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, மாணவி நவீனாவைக் கட்டிப்பிடித்துள்ளார். இதில் தீக்குளித்த செந்தில் உயிரிழந்து விட்ட நிலையில், ஒரு பாவமும் அறியாத மாணவி நவீனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 30: கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சோனாலி, 20 விடுதியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார். கரூரில் கல்லூரி மாணவி சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலைக்குக் காரணம் ஒருதாலைக் காதல்தான்.
ஆகஸ்ட் 31: தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்கொண்டார்.
அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனைச் சுற்றி வளைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
மூன்றாவதாக பாதிப்புக்குள்ளானது புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி. எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரோஸ்லினுக்கு கிடைத்த பரிசு அரிவாள்வெட்டு.
செப்டம்பர்
செப்டம்பர் 15: அன்னூர் அருகே ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் தான்யா. பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தன்யாவிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. வீட்டில் தனியாக இருந்த தன்யா, தன்னை காதலிக்கவில்லை என்ற விரக்தியில், ஜாகீர் கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே தன்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பாலக்காட்டில் தலைமறைவாக இருந்த ஜாகீரை கைது செய்தனர்.
டிசம்பர் 7:
சோனியா, என்ற இளம் பெண்ணை வினோத் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க மறுத்த சோனியாவை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கழுத்தறுத்து கொலை செய்தார். அந்த நேரத்தில் அரசியல் பிரபல தலைவர்களின் மரணத்தால் இந்த கொலை பெரும் அதிர்வலைகளை உருவாக்கவில்லை. தமிழகத்தில் 2015ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 5847 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.