மறக்க முடியுமா?.. மீண்டும் வரப் போகும் வட கிழக்குப் பருவ மழை.. 2015 வெள்ளம் பிளாஷ் பேக்!
சென்னை: சென்னை அடையாறு கூவம் நதிக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. கூவம், அடையாற்றில் பெருகிய வெள்ளம், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசித்த மக்களை அகதிகளாக மாற்றியது. பெரு வெள்ளத்திற்குக் காரணம் என்று மத்திய அரசு ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஏன் என்றால் மற்ற மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். ஆனால் தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சிறிதளவுதான் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் தமிழ்நாட்டில் பெய்யும்.
வடகிழக்கு பருவமழையின் அளவை அளக்கும் காலம் அக்டோபர் மாதம் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம்தேதி வரையாகும். ஆனால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20தேதி தான் சராசரியாக தொடங்கும்.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை சராசரி அளவு பெய்துள்ளது. கடந்த 2012,13,14ம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யவில்லை. அதாவது போதிய அளவுக்கு பெய்யவில்லை. இதனால் ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பவில்லை. சில நீர் நிலைகள் மட்டும்தான் நிரம்பின.
2015ம் ஆண்டாவது வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்து ஏரிகள், குளங்கள் நிரம்ப வேண்டும். விவசாயம் நன்றாக இருக்கவேண்டும் பயிர்கள் நன்றாக விளையவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

வடகிழக்குப் பருவமழை
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ம்தேதிதான் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனால் தாமதமாக தொடங்கினாலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட தமிழகம் வெள்ளநீரால் சூழப்பட்டது. நவம்பர் மாதம் தீபாவளிப் பண்டிகை நேரத்தில் கடலூரை சூறையாடிய மழை, நவம்பர் இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைக் காவு வாங்கியது.

ஆறுகளில் வெள்ளம்
சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. கூவம், அடையாற்றில் பெருகிய வெள்ளம், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசித்த மக்களை அகதிகளாக மாற்றியது. டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் விடாமல் பெய்த கனமழைக்கு ஐடி நிறுவனங்களும் தப்பவில்லை. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேளச்சேரி வெள்ளச்சேரியாக மாறியது.

தீவாக மாறிய புறநகர் பகுதிகள்
வடசென்னையில் வசித்தவர்கள் மட்டுமல்லாது சென்னையின் புறநகர்பகுதிகளில் வசித்தவர்களும், தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்தவர்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மொட்டைமாடியே வாழ்விடமானது. வீடுகளைச் சுற்றி தண்ணீர் இருந்தாலும் குடி தண்ணீருக்காக பிறரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது.

சாலைகளில் படகுகள்
மீட்புப்படையினர் கொண்டுவந்து கொடுத்த உணவுகள் அமிர்தமானது. பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டதால் பல மாணவர்கள் மீட்பர்களாக செயல்பட்டனர். உணவுகளையும், தண்ணீர் பாட்டில்களையும் கொண்டுபோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தனர். மேடான பகுதிகளில் வசித்தவர்கள் கூடபோக்குவரத்திற்குப் படகுகளை தேடினர்.

மீட்பு பணித்துறை
விமானப்படை, கடற்படை, காவல்துறை, தீயணைப்பு மீட்புப்பணித்துறை, திரைப்பட நட்சத்திரங்கள், ஜாதி, மதம் பார்க்காமல் பாடுபட்ட சமூக ஆர்வலர்களினாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் ஒரு மாதத்தில் மீண்டன. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்க யாராலும் முடியாமல் போனது.

வெள்ள பாதிப்பு எதனால்?
செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திறந்து விட்டதே வெள்ளத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில் அடையாறு, கூவம் ஆற்றின் கரையோரங்களிலும், வடிகால் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதே வெள்ளத்திற்குக் காரணம் என்று மத்திய அரசு ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறியுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இதே மீண்டும் வரப்போகிறது வடகிழக்குப் பருவமழை, சென்னை அடையாறு கூவம் நதிக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்தாண்டு வெள்ளம் ஏற்பட காரணம் குறித்து, ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி திரு. எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பணம் செலவிடப்பட்டதா?
நீர்நிலைகளைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்றும், தூர்வாரும் பணிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும், இது சம்பந்தமாக ஒரு மாதத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? வடிகால் வசதிகளை ஏற்படுத்த ஒதுக்கப்பட்ட பலஆயிரம் கோடி ரூபாய்கள் அந்த பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளனவா? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்குத்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications