கனமழையில் சிக்கி சின்னாபின்னமான ஐ.டி. நிறுவனங்கள்... வாகனத்துறைக்கும் பலத்த அடி!
சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வாகனம் மற்றும் ஐ.டி நிறுவனங்கள் பல கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட தீவிரமாக உள்ளது. கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கனமழையில் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. சென்னையில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
பொதுமக்கள் மட்டுமின்றி இந்தக் கனமழைக்கு ஐடி நிறுவனங்களும் தப்பவில்லை.

விடுமுறை...
பல ஐ.டி நிறுவனங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஊழியர்களுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தற்காலிக இடமாற்றம்...
இதனால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த ஐ.டி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை கோவை, பெங்களூரு, கொச்சி போன்ற இடங்களுக்கு அதிரடியாக தற்காலிக இடம் மாற்றம் செய்துள்ளது.

இழப்பு...
மழை காரணமாக ஐ.டி துறைக்கு மட்டும் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 முதல் 10 மில்லியன் டாலர் வரையிலும், பெரிய நிறுவனங்களுக்கு 40 முதல் 50 மில்லியன் டாலர் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத் துறையும்...
ஐ.டி நிறுவனங்களைப் போலவே வாகன உற்பத்தி துறையும் மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதற்கு ரூ.15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வியாபாரிகளுக்கும் நஷ்டம்...
இதேபோன்று, தொடர்ந்து பெய்த கனமழையால் பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் சூப்பர் மார்க்கெட் வைத்திருப்பவர் வரை என அனைவரும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளனர். கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் நீரில் மூழ்கியதால் அவற்றை குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications