தேர்தல் சோதனையில் மாட்டிய ரூ. 5 கோடி வெள்ளி கட்டிகள்-உரிய ஆவணம் இருந்ததால் விடுவிப்பு
சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி அருகே நடத்திய வாகன சோதனையில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் சிக்கியுள்ளன.
அதேபோல வேலூரில் ரூபாய் 53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் வருகிற 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேதி கடந்த 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. சோதனைகளும் நடந்து வருகின்றன.
பணப்பட்டுவாடா:
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50 ஆயிரத்து மேல் எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கைப்பற்றி வருகின்றனர்.
உரிய ஆவணம் இருந்தால் ஓகே:
இந்த விதியின் படி உரிய ஆவணங்களுடன் ரூபாய் 10 லட்சம் வரை எடுத்துச் செல்ல வியாபாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டிருந்தனர்.
5 கோடி மதிப்பு வெள்ளி:
அப்போது அங்கு வந்த ஒரு வேனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் சரக்குகள் வைக்கும் இடத்தில் 32 வெள்ளிகட்டிகள் இருந்தன. அதற்குரிய ஆவணத்தில் 1008 கிலோ வெள்ளி கட்டிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கொலுசு தயாரிப்பு:
வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, சேலத்தில் உள்ள கொலுசு தயாரிக்கும் பட்டறைகளுக்காக ஒரு டன் வெள்ளிக்கட்டிகளை சென்னையில் இருந்து கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
சரியான ஆவணங்கள்:
இதற்கான ஆவணங்களை அவர்கள் சரியாக காட்டியதால் வேனை பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர்.
வாகன தணிக்கை:
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே நேற்று மதியம் வாகன தணிக்கை ஈடுபட்டு இருந்தனர்.
வங்கிப் பணம்:
அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூபாய் 53 லட்சம் இருந்தது. இதுபற்றி காரில் வந்தவர்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிகிளையில் இருந்து வந்தவாசி கிளைக்கு எடுத்து சென்றதாக கூறினர்.ஆனால், இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications