கமல்ஹாசன் பிரச்சார வாகனத்தை திடீரென மறித்த பறக்கும் படை.. ரெய்டால் பரபரத்த தஞ்சை
தஞ்சை: தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்ற பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
ஆனால் அவர் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக பிரச்சாரம்
இன்று மதியம் நாகை மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், சினிமாவில் இந்தியன் தாத்தாவாக வந்து ஊழல் செய்த பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிற பாத்திரத்தில் நடித்திருப்பேன். சினிமாவில் மட்டும் கிடையாது, நிஜ வாழ்க்கையிலும் செய்வேன். அது எப்படி எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் என்று கேட்டால்.. எங்கள், அப்பா எங்களை அப்படித்தான் வளர்த்துள்ளார் என்றார்.
வாகனத்தை வழிமறித்தனர்
பின்னர், மாலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடர்ந்தார். தஞ்சாவூரில் அவர் பிரச்சாரத்திற்கு சென்றபோது, அவரது பிரச்சார வாகனத்தை வழிமறித்து, பறக்கும் படையினர் அங்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக சோதனையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
சோதனை
சோதனைக்கு பிறகு அங்கு எதுவுமே இல்லை என்பதை புரிந்து கொண்ட பறக்கும் படையினர் வாகனத்தை மேற்கொண்டு செல்வதற்கு அனுமதித்தனர்.
திருப்பூர் மாவட்டம்
ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில், கமல்ஹாசன் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் உள்ளது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.