தண்ணீராய் ஓடும் கரன்சி.. ஆர்.கே.நகரில் "பணத் தோட்டம்".. பறக்கும் படை வந்ததால் தப்பி ஓட்டம்!
ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்ந்து நடைபெற்று வருவதாக திமுக புகார் தெரிவித்து வருகிறது. இதனால் பறக்கும் படை பணப்பட்டுவாடா நடைபெற்ற இடத்திற்கு சென்ற போது பணம் கொடுத்தவர்கள் தப்பியோடிவிட்டனர
சென்னை: ஆர்.கே நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வாக்காளர்களின் வாக்குகளை பெற பணத்தை தண்ணீர் போல வாரி இறைக்கின்றன அரசியல் கட்சிகள்.
இந்தத் தேர்தலில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் திமுகவின் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சியின் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் மதுசூதனன், சிபிஎம்மின் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா, பாஜகவின் கங்கை அமரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இவர்களின் அதிமுக இரண்டு அணியாக பிரிந்து தேர்தலை சந்தித்து வருகிறது. அவர்களுடைய கட்சியின் பெயர், சின்னம் என எதனையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் ஓட்டுக்கு பணம் தருவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைது
டிடிவி தினகரன் ஆதரவாளர் பணம்பட்டுவாடா செய்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அதே போன்று விளக்குகள் வழங்கப்பட்டதாக அம்மா கட்சியை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
புகார்
இந்நிலையில், நேற்று தண்டையார்பேட்டை சிவகாமி நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அறிந்த திமுகவினர் தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
தப்பியோட்டம்
இந்தப் புகாரை அடுத்து பறக்கும் படையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைக் கண்ட பணம்பட்டுவாடா செய்தவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என்று குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல்
இதே போன்று நேதாஜி சாலையில் பணம் விநியோகம் செய்துக் கொண்டிருந்தவர்களை திமுகவினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 65 ரூபாய் பணம், யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பெயர் பட்டியல், வாக்காளர் பட்டியல் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனால் ஆர்.கே. நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.