தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கியது ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கண்டெய்னரில் இருந்து ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய் நாட்டில் உள்ள ஜபால் அலி துறைமுகத்திலிருந்து என்எஸ்என் குஜராத் என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் வந்த கண்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் அதிரடி ஆய்வு செய்தனர். அதில் கேரளாவை சேர்ந்த ஓரு நிறுவனத்தின் பெயரில் வந்த கண்டெய்னர் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சரி பார்த்தனர். அந்த ஆவணத்தில் ஜிப்சம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அந்த பெட்டியில் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த இந்தோனேஷிய தயாரிப்பான குடங்கிராம் என்ற பெயரில் சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 100 பெட்டிகளில் இருந்த 4,40,000 சிகரெட்டுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வகை சிகரெட்டுகளுக்கு இந்தியாவி்ல் தடை இருப்பதால் விற்பனை செய்ய முடியாது. இதனால் இது கேரளாவில் கடத்தி விற்பனை செய்யப்படுகிறதா என்றும், இதை ஜிப்சம் போர்டு என்ற பெயரில் இறக்குமதி செய்தது யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்தோனேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.