பற்றி எரியும் முதல்வரின் தொகுதி... 100 ஏக்கர் வனப்பகுதி அழியும் அபாயம்!
பெரியகுளம்: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர். இப்பகுதியில் ஒரு புறம் கொடைக்கானல் பகுதியினை சேர்ந்த மலைப்பகுதியும், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக உள்ள மலைப்பகுதியும் அமைந்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அவ்வப்போது திடீரென காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். சமீப காலங்களில் குறைந்திருந்த இந்த தீ விபத்து, கோடை ஆரம்பித்திருப்பதால் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ஏழு மணியளவில் பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டியிலுள்ள கைலாசநாதர் கோயிலின் பின்புறமுள்ள மலைப்பகுதியில் திடீரென தீ பரவியது. விலை உயர்ந்த மரங்களும் அபூர்வ வகை உயிரினங்களும் கொண்ட இந்த மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த காட்டுத்தீயினால் நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் அழிந்துபோக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட வனத்துறையினர், காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இவ்வூரில் எழுந்தருளியுள்ள கைலாசநாதரை வணங்கியபின்தான் தன்னுடைய அனைத்து முக்கிய பணிகளையும் துவங்குவார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications