1986-ம் ஆண்டு கொலை வழக்கு: இலங்கை இந்திய தூதரகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 'டக்ளஸ்' ஆஜராக உத்தரவு!
சென்னை: 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1980களில் தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கான போராடிய பல்வேறு இயக்கங்கள் தங்கி இருந்தன. சென்னையிலும் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடினர்.

அந்த கால கட்டத்தில், அதாவது 1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக டக்ளஸ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 1993-ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆனால் இந்த பிடிவாரண்ட் நீண்டகாலமாக செயல்படுத்தப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணைகளின் முடிவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் டக்ளஸ் தேவா இலங்கையில் இருந்தே ஆஜராகலாம் என கடந்த ஆண்டு அனுமதி அளித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக நடத்த வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு டக்ளஸ் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications