"....எனும் நான்" தினகரனின் பேச்சைக் கேட்டு அடுத்த முதல்வர் கனவில் மிதக்கும் அந்த 3 மாஜிக்கள்!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவருக்குத் தான் முதல்வர் பதவி என்று டிடிவி. தினகரன் கூறி இருப்பதால் மாஜிக்கள் சிலர் முதல்வர் கனவில் மிதக்கின்றனர்.
Recommended Video
சென்னை: முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை 18 எம்எல்ஏக்களில் ஒருவருக்குத் தான் அந்த வாய்ப்பு என்று டிடிவி. தினகரன் கூறியிருப்பதை நம்பி மாஜிக்கள் சில முதல்வர் கனவில் மிதக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்பே வராத நிலையில் ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் தரப்பு சொல்லி வரும் நிலையில், முதல்வர் ஆசை வேறு இவர்களுக்கு மேலும் தூபம் போட்டது போல ஆகிவிட்டது. முதல்வர் நாற்காலி மயக்கத்தில் இருப்பவர்களின் ஆசை நிறைவேறுமா?
கோடங்கி குடுகுடுப்பை அடித்து குறி சொல்வது போல அதிமுக ஆட்சி 6 மாதத்தில் கவிழும், 3 மாதத்தில் கவிழும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று இலவு காத்த கிளி கணக்காக டிடிவி. தினகரன் அணி பேசி வருகின்றனர். இதன் உச்சம் பிப்ரவரி 2 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தினகரன் கதிராமங்கலத்தில் பேசிய பேச்சு.
தனிக்கட்சி தொடங்குவேன், இல்லை இல்லை அதிமுகவை மீட்பேன் என்று இடையில் தினகரன் பிசகியதால் அவரது ஆதரவாளர்கள் சுணங்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு உற்சாகமூட்டுவது போல இருந்தது கதிராமங்கலத்தில் தினகரன் பேசிய பேச்சு.
தினகரனின் அறிவிப்பால் குஷி
எனக்கு முதல்வராகும் ஆசை இல்லை, 18 எம்எல்ஏக்களில் ஒருவர் தான் முதல்வர் என்று தினகரன் கூறினார். இதனால் சபாநாயகரால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் எம்எல்ஏக்கள் குஷியாகியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் எம்எல்ஏ அலுவலகத்தை காலி செய்துவிட்டு, தொகுதிப் பணியில் ஈடுபடாமல் அரசின் எம்எல்ஏவுக்கான சலுகையை அனுபவிக்க முடியாமல், அண்மையில் உயர்த்தப்பட்ட சம்பள உயர்வு உள்பட எம்எல்ஏக்களின் மாத சம்பளமும் இல்லாமல் இருக்கின்றனர்.
பழனிசாமி சேருக்கு முதல் டார்கெட்
தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத் தான் வரும் என்று தொடர்ந்து சொல்லி வருகின்றனர் தினகரன் அணியினர். இந்நிலையில் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ரைவல்ரி படையை இறக்கி அவரது பதவிக்கு வேட்டு வைப்பது தான் இவர்களின் முதல் டார்கெட்.
திருப்திபடுத்திய தினகரன்
தொடக்கம் முதலே தினகரன் அணியினர் முன்வைக்கும் டார்கெட்டும் இது தான், முதல்வர் பதவிக்கு சபாநாயகர் தனபாலை நிறுத்த ஆசையைத் தூண்டினர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காத நிலையில் 18 எம்எல்ஏக்களில் ஒருவர் தான் முதல்வர் என்று சொல்லி இப்போதைய தனது ஆதரவு கோஷ்டியை தக்க வைத்துள்ளார் தினகரன்.
முதல்வர் கனவில் மாஜிக்கள்
தினகரனின் பேச்சை நம்பி சசிகலா, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் என்று வெளி உலகிற்கு காட்டி வரும் ஊடகங்களின் நண்பர்கள்(அதாவது அடிக்கடி பேட்டி கொடுப்பவர்கள்) இருவர் தாங்கள் தான் முதல்வர் என்ற கனவில் மிதக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் 11 எம்எல்ஏக்களை புதுச்சேரி ரிசார்ட், கூர்க் ரெசார்ட்டில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.
தினகரனின் வலது கை
இன்னொருவர் தமிழகமே எதிர்பார்த்த ஒரு விஷயத்தை செய்துவிட்டு அசால்ட்டாக தினகரன் அருகில் சிரித்த முகத்துடன் இன்றும் வலம் வருபவர். தினகரனுக்காகவும், சசிகலாவிற்காகவும் பல விஷயங்களைச் செய்துள்ளதால் தனக்கு தான் அந்த நாற்காலி என்ற ஆசையில் சுற்றி வருகிறாராம் அந்த மாஜி.
மாஜி அமைச்சரையும் விடாத ஆசை
இந்த இருவர் மட்டுமல்ல ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வர் கனவில் மிதந்த, தற்போது தினகரன் அணியில் இருக்கும் மாஜி அமைச்சரும் கூட அந்த ஆசையில் உள்ளாராம். ஆனால் இவர் தினகரனுக்கு எதிராக குடும்பத்தில் இருந்து கொண்டே எதிர்ப்பு தெரிவிக்கும் கும்பலுக்கு நெருக்கமானவர் என்ற தோற்றம் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு குறைவு தான் என்றும் மற்ற மாஜிக்கள் இருவரும் கற்பனை கோட்டை கட்டி இருக்கிறார்களாம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிடிக்கத் தான் எத்தனை எத்தனை கனவுக்கோட்டைகள் இதில் எது ஜெயிக்கப்போகிறது?