தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ. அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் காலமானார்!
திருநெல்வேலி: தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்த கருப்பசாமி பாண்டியன், திமுகவுக்கு தாவினார். திமுகவில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
எம்ஜிஆர் காலத்திலேயே திருநெல்வேலி மாவட்ட அதிமுக பிரமுகராக கோலோச்சியவர் கருப்பசாமி பாண்டியன். அம்மாவட்டத்தின் அதிமுக முகமாக இருந்தவர். எம்ஜிஆர் காலத்தில் 1977 மற்றும் 1980 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். எம்ஜிஆரால் கருப்பு நிறமாக இருந்தாலும் உள்ளத்தில் வெள்ளை மனம் கொண்டவர் என பாராட்டப்பட்டவர் கருப்பசாமி பாண்டியன்.

பின்னர் ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவில் கருப்பசாமி பாண்டியன் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். அண்ணா திமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்ததான, துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார் கருப்பசாமி பாண்டியன்.
ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாடுகளால் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். 2006-ம் ஆண்டு திமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார் கருப்பசாமி பாண்டியன்.
ஆனால் திமுகவில் கருப்பசாமி பாண்டியனால் நீடிக்க முடியவில்லை. இதனால் 2015-ல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருப்பசாமி பாண்டியன், மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அமைப்பு செயலாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
அண்மை காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் கருப்பசாமி பாண்டியன். அவருக்கு உடல்நலக் குறைவு இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தூக்கத்திலேயே கருப்பசாமி பாண்டியன் உயிர் பிரிந்தது. கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications