தமிழக அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்பு: ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது.
15வது சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது அதிமுக. இதையடுத்து நேற்று முன்தினம் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து அன்று மாலை மேலும் 4 அமைச்சர்களை நியமித்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 4 அமைச்சர்களிடம் இருந்து துறைகள் பிரிக்கப்பட்டு புதிதாக நான்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதிய அமைச்சர்களது பெயரும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி.பாஸ்கரன் காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சராகவும், ஆரணி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், வாணியம்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ஓசூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.பாலகிருஷ்ண ரெட்டி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications