வேன், காலேஜ் பஸ், அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்.. பெருங்களத்தூரில் பரபரப்பு!
சென்னை: தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அரசு பேருந்து, சுற்றுலா வேன், கல்லூரி பேருந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சனி, ஞாயிறு, திங்கட்கிழமை சுதந்திர தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலையே சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கிளம்பினர். இதனையடுத்து தாம்பரம், பெருங்களத்தூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா தலங்கள், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து ரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் சென்னை திரும்பினர். சாலை வழியாக சென்னை திரும்பியவர்களுக்கு பெருங்களத்தூர் இடையே கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
காலை 6 மணி முதலே சென்னை பெருங்களத்தூர் தாம்பரம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல நகர்ந்தன. அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் தாமதமாக வருவதால் நகருக்குள் போலீசார் அனுமதிப்பதில்லை என்று கூறி தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் இறக்கிவிடப்படுவதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
நடுவழியில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதை அடுத்து குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகினர். புறநகர் பகுதிகளில் பயணிகள் இறக்கிவிடப்படுவதால் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனிடையே சென்னை - பெருங்களத்தூர் இடையே முன்னால் சென்ற அரசு பேருந்து திடீரென நின்றதால் அதன் பின்னால் வந்த சுற்றுலா வேன், தனியார் பேருந்து என மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் வேனில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பியவர்கள் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications