புஷ் முதல் மஞ்சி வரை.. செருப்படி மற்றும் ஷூ வீச்சில் சிக்கிய தலைவர்கள்!
சென்னை: யார் மீதாவது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக இருந்தால் விதம் விதமான முறையில் நம்மவர்கள் அதைக் காட்டுவார்கள், வெளிப்படுத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளில் இது வித்தியாசமான போக்காக மாறி வருகிறது. அதாவது செருப்பை எடுத்து வீசுவது, ஷூவை வீசுவது, காட்டுவது என்று பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
லேட்டஸ்டாக பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி மீது தனது காலணியை எடுத்து வீச முயன்று சிக்கியுள்ளார். பாட்னாவில் இந்த சம்பவம் நடந்தது.
பாட்னாவில் நடந்த ஜனதா தர்பார் நிகழ்ச்சியின்போது இந்த சம்பவம் அரங்கேறியது. அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
புஷ் முதல்
இதன் மூலம் செருப்படி மற்றும் ஷூ வீச்சில் சிக்கிய தலைவர்கள் வரிசையில் மஞ்சியும் இணைந்துள்ளார். இந்த வகையில் பிரபலமானது முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம்தான்.
குட்பை முத்தம்
2008ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், ஈராக்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிக் கொண்டிருந்தார். அப்போது டிவி செய்தியாளரான முந்தாதர் அல் ஜெய்தி என்பவர், தனது ஷூவை எடுத்து புஷ் மீது வீசினார். ஆனால் புஷ் லாவகமாக திரும்பி தன் மீது ஷூ படாமல் தப்பினார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாயே, இது ஈராக் மக்கள் உனக்குத் தரும் குட்பை முத்தம் என்று கத்தியபடி ஷூவை வீசினார் ஜெய்தி.
வென்ஜியாபோ
சீன முன்னாள் பிரதமர் வென் ஜியாபோ மீது லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது ஷூ வீசப்பட்டது. பல மீட்டர் தூரத்திலிருந்து ஒரு மனித உரிமை போராளி வீசிய ஷூ வென் மீது படாமல் போனது. உடனடியாக அந்த நபரைப் போலீஸார் மடக்கிப் பிடித்து விட்டனற்.
அகமதினிஜாத்
ஈரான் முன்னாள் அதிபர் மகமூத் அகமதினிஜாத்தும் ஷூ வீச்சிலிருந்து தப்பவில்லை. 2009ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ஈரானின் உருமியே நகருக்குச் சென்றபோது ஒருவர் ஷூவை வீசினார்.
ப.சிதம்பரத்திற்கும் ஒரு செருப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த வரவேற்பைப் பெற்றார். அப்போது ஜர்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் தனது ஷூவை எடுத்து சிதம்பரத்தை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை.
மன்மோகன் சிங்
2009ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் இதே வரவேற்பைப் பெற்றார். ஆனால் ஷூ, மன்மோகன் சிங்குக்கு முன்பாகவே விழுந்து விட்டது.
எதியூரப்பா
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எதியூரப்பா, 2009ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ஒரு செருப்பு வீச்சைக் கண்டார். ஹசன் மாவட்டத்தில் நடந்த பாஜக பிரசாரத்தின்போது அவரை நோக்கி ஒரு குடிகாரர் செருப்பை வீசினார்.
ஆசிப் அலி சர்தாரி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு வந்திருந்தபோது, அவரை நோக்கி சர்தார் ஷமீம் கான் என்ற நபர் தனது இரு ஷூக்களையும் மாறி மாறி வீசினார். ஆனால் அந்த ஷூக்கள் சர்தாரி மீது படவில்லை.
டோனி பிளேருக்கு முட்டை எக்ஸ்ட்ரா!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கு வித்தியாசமான எதிர்ப்பைக் காட்டினார் ஒரு நபர். ஷூவை வீசியதோடு நில்லாமல் முட்டையையும் எடுத்து அவர் மீது வீசினார்.
கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்தான் அடிக்கடி இதில் சிக்கி அடி வாங்கியவர். 2011ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி லக்னோவில் அவர் மீது ஷூ வீசப்பட்டது. மை வீசப்பட்டது. அடுத்தடுத்து இதுபோன்ற எதிர்ப்பை இவர் சந்திக்கவும் நேரிட்டது.
ராகுல் காந்தி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2012ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி டேராடூனில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை.
நிதின் கத்காரி
கடந்த அக்டோபர் 6ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கத்காரி புனேவுக்கு வந்திருந்தபோது, அவர் மீது ஒரு நபர் ஷூவை வீச எத்தனித்தார். ஆனால் அவரை மடக்கிப் பிடித்து விட்டனர். அவர் குடிகாரர் என்பது பின்னர் தெரிய வந்தது.