டேங்க்கிலிருந்து ஒழுகிய எரிபொருள் - சென்னை டூ திருச்சி விமானம் கிளம்புவதில் 2 மணி நேர தாமதம்

துபாயிலிருந்து சென்னை மார்க்கமாக திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர் விமானத்தில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் ஒரு வால்வுப் பகுதியில் ஏற்பட்டிருந்த பழுது காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு தரையில் கொட்டியது.
இதையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்திலிருந்த பயணிகள் பத்திரமாக விமான நிலையத்தினுள் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர், விமானத்தின் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 150 லிட்டர் அளவுள்ள விமான எரிபொருள் தரையில் கொட்டியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் நடைபெறவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்குள்ளாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் சாலை மார்க்கமாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பின்னர் மீதமிருந்த பயணிகளுடன், பழுது சரி செய்யப்பட்ட விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக நேற்று மாலை 5 மணி அளவில் திருச்சி புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications