சேலம், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 750 பெட்ரோல் பங்க்குகள் மூடல்: பொதுமக்கள் அவதி
சேலம்: அனைத்து டீலர்களுக்கும் ஒரே மாதிரியான கமிஷன் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை ஆகிய 8 மாவட்டங்களில் 750க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் நிரப்பும் மையம் செயல்படுகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர் ஒரு பகுதி, வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை சேர்ந்த 350 வினியோகஸ்தர்களுக்கு இந்த மையத்தில் இருந்து தான் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு சில டீலர்களுக்கு மட்டும் தள்ளுபடி வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த தள்ளுபடியின் காரணமாக அந்த டீலர்கள், டீசலை ஒரு ரூபாய் வரை குறைவாக விற்பதாக இதர டீலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் இயங்கும் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்பும் லாரி உரிமையாளர்களுக்கு டீசல் லிட்டருக்கு 1 ரூபாயும், பொதுமக்களுக்கு 60 காசும் சலுகை வழங்கப்படுவதாகவும், அதேபோல் அதிக டீசல் விற்பனை செய்யும் டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் கூடுதலாக கமிஷன் தொகை வழங்குவதாகவும், இதனால் குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகளில் தள்ளுபடி விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதால் மற்ற டீலர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஐஓசி நிறுவனம் சார்பில் அதிகமாக விற்பனை செய்வோருக்கு கூடுதல் கமிஷன் வழங்குகின்றனர். அதேபோல் அனைவருக்கும் வழங்கவேண்டும். தனியார் நிறுவன பெட்ரோல் பங்குகளில் லிட்டருக்கு ரூ.1.15 குறைவாக டீசல் விற்கப்படுவது போல், சங்கங்கள் சார்பில் இயங்கும் பங்குகளிலும் தள்ளுபடி விலையில் டீசல் விற்கப்படுகிறது. இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதி கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்தியன் ஆயில் பெட்ரோலிய வினியோகஸ்தர் சங்கம் அறிவித்தது.
8 மாவட்டங்களில் ஸ்டிரைக்
எனவே, இந்தியன் ஆயில் நிறுவனம், அனைத்து டீலர்களுக்கும் ஒரே மாதிரி கமிஷன் வழங்க வேண்டும், மறைமுக கமிஷன் வழங்குவதை நிறுத்த வேண்டும், லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க்குகளில் தள்ளுபடி அறிவிப்பு போர்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி 8 மாவட்டங்களை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சு வார்த்தை தோல்வி
இதனால் ஆயில் நிறுவனத்திடம் இருந்து பெட்ரோல், டீசல் கொள்முதலை உரிமையாளர்கள் நிறுத்திக்கொண்டதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம், லாரி உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் டீலர்களிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, வேலை நிறுத்தம் தொடரும் என டீலர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் அவதி
இதனால் சேலம் உள்பட 8 மாவட்டங்களில் நேற்று மதியம் முதல் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சேலத்தில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் நேற்று காலையில் பெட்ரோல் நிரப்ப இருசக்கர வாகனங்களும், டீசல் அடிக்க கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
காத்திருந்த வாகனங்கள்
வேலை நிறுத்தம் காரணமாக பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதேசமயம் இருப்பு உள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோலை நிரப்பி சென்றதை காணமுடிந்தது.
தமிழகம் முழுவதும் மூட முடிவு
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் உணவுத்துறை செயலாளர் தலைமையில் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், இதில் சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்றும், அவ்வாறு இல்லையென்றால் தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்றும் பெட்ரோல் பங்க் டீலர்கள் சிலர் தெரிவித்தனர்.