லட்டு, இளநீர் கொடுத்து தென்னந்தோப்பை அறிமுகம் செய்த ஜி.கே.வாசன்... அது மரணயோகமாம்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னத்தைப் அறிமுகம் செய்த ஜி. கே.வாசன், அனைவருக்கும், லட்டு, இளநீர் கொடுத்து உபசரித்தார். ஆனால் கடைசி வரைக்கும் யாருடன் கூட்டணி என்று சொல்லவேயில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால் ஆந்திரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்த சின்னங்களில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதால் தேர்தல் ஆணையம் தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் வாசன் அறிமுகம் செய்த நாளும், நேரமும் சரியில்லையாம். செவ்வாய்கிழமை, கேட்டை நட்சத்திரம் சரியான மரணயோகம் என்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர்கள் தேர்விலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணியும், பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனியாகவும் களத்தில் உள்ளன.

தமிழ் மாநில காங்கிரஸ்
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டு சேரும் என்பது புரியாத புதிராக உள்ளது. த.மா.கா. தொடங்கிய நாளில் இருந்து, அதிமுகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டையே மறைமுகமாக எடுத்துவருகிறது. எனவே அந்த கட்சி அதிமுக உடன் கூட்டணி சேரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

வெற்றிக்கூட்டணி
ஜி.கே.வாசன் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் என்று கூறிவருகிறார். அனைத்து கூட்டணிகளும் தாங்கள் தான் வெற்றிக் கூட்டணி என்று கூறிவருகின்றன. யாருடன் கூட்டணி என்பதை மார்ச் 2-வது வாரத்தில் அறிவிப்பேன் என்றார், ஆனால் அறிவிக்கவில்லை. இப்போது ஏப்ரலில் அறிவிப்பேன் என்று கூறுகிறார்.

மரணயோகத்தில் அறிமுகம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த சின்னத்தை நேற்று அறிமுகம் செய்தார் ஜி. கே.வாசன். ஆனால் அது சரியான மரணயோகம் என்கின்றனர் தமாகா முக்கிய தலைவர்கள்.

தட்டு நிறைய லட்டு
சின்னத்தை அறிமுகம் செய்த ஜி.கே.வாசன், வந்திருந்த அனைவருக்கும் லட்டு வழங்கினார். கூடவே தென்னந்தோப்புகாரர் இளநீர் வழங்கி உபசரித்தார். அதெல்லாம் சரிதான் செவ்வாய்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் இதை அறிவிக்க வேண்டுமா என்பதுதான் தமாகா தலைவர்களின் கேள்வியாகும்.

கூட்டணி அறிவிப்பில்லை
அதே நேரத்தில் செவ்வாய்கிழமை, தேய்பிறை என்பதால்தான் ஜி.கே.வாசன் நேற்று கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்கின்றனர். ஆனாலும் வாசன் மவுனம் காத்து வருவது கட்சி தொண்டர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் காலதாமதம் செய்தால், எங்கள் நிலை சற்று கஷ்டம் தான் என்றும் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications