ஜெயலலிதா மறைவில் எல்லாமே மர்மம்.. மோடிக்கு கடிதம் எழுதிய கவுதமி பரபரப்பு பேட்டி
உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் உள்ளதாக நடிகை கவுதமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதுகுறித்து அவர் பேட்டியளித்தார்.
சென்னை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இந்நிலையில் நடிகை கவுதமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெயலலிதா சாவிலுள்ள மர்மத்தை அவிழ்க்க வேண்டும் என கோரியுள்ளார். சாமானியர்களின் பிரதிநிதியாக தான் இந்த கோரிக்கையை முன் வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடிதம் குறித்து தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு கவுதமி அளித்த பேட்டி இதுதான்: என்ன நடந்தது என்பது மட்டும் இன்று மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஏதாவது நடந்தால் கூட என்ன ஆனது என்ற ஆர்வம் வரும். அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய தலைவருக்கு, அன்பு செலுத்தப்பட்டவருக்கு ஒன்று ஆகியுள்ளது என்றால், அது பற்றி அறிய ஆர்வம் இருக்கவே செய்யும்.
மரணத்தில் எந்த இடத்தில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டு தெரிவிக்க விரும்பவில்லை. யார் என்ன செய்தார்கள், யார் பொறுப்பு என்பது பற்றியும் நான் பேசவில்லை. ஏனெனில் நாம் எல்லோருமே பொறுப்பாளர்கள்தான். பல கோடி பேருக்கு இருக்கும் சந்தேகத்தைதான் நான் கேட்கிறேன்.

மக்களுக்கு உரிமை
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைமை வகித்தவர் குறித்து அறிய மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படாமல், யாரையும் பார்க்க முடியவில்லை, அது எதனால், எப்படி, யார் போன்ற கேள்விகள் எஞ்சி உள்ளன. நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரதமர். மாநிலத்திற்கும் மேலே ஒரு அதிகார மையம் என்றால் அது மத்திய அரசுதான். எனவேதான் நான் மோடிக்கு கடிதம் எழுதினேன்.

அணுக கூடிய பிரதமர்
மோடி ஆரம்பம் முதலே, நான் மக்களில் ஒருவர் என நடந்து கொள்கிறார். யார் வேண்டுமானாலும் அவரை தொடர்புகொள்ள முடியும். டிவிட் செய்யலாம், லெட்டர் எழுதலாம். அதனால், இந்தியாவுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைத்துள்ளார் என்ற பெருமை எனக்கு உள்ளது. கண்டிப்பாக அவரிடம்தானே நான் கேட்டாக வேண்டும்.

எல்லாமே சந்தேகம்
எனக்கு தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா இறப்பில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான சந்தேகம் இல்லை. ஏதாவது ஒன்று தெரிந்தால் சந்தேகப்படலாம். எதுவுமே தெரியாதபோது மொத்த நிகழ்வுமே சந்தேகத்திற்குட்பட்டதாக உள்ளது.

பொறுத்திருக்கலாம்
மாநில அளவில் நான் யாரையும் அப்ரோச் செய்யவில்லை. மோடி எனது கடிதத்திற்கு பதிலளிப்பார் என நம்பிக்கையுள்ளது. எனவே வேறு யாரையும் அணுகவில்லை. இப்போதுதானே கடிதம் எழுதியுள்ளேன். அதை படித்துவிட்டு பதிலளிக்க கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்.

பாராட்டு குவிகிறது
இக்கடிதம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் எனக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தங்களின் மனதில் இருந்த கேள்விகளை நான் கேட்டதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். இதை பார்த்ததும் இன்னமும் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. எல்லோருடைய எண்ணத்திற்கும், நான் குரல் கொடுத்துள்ளேன் என நினைக்கிறேன். பொதுவான பிரச்சினைகள் பலவற்றுக்கு இதற்கு முன்பும் நான் குரல் கொடுத்துள்ளேன். இதுதான் முதல் முறை கிடையாது.












Click it and Unblock the Notifications