சேலம் அருகே குழந்தை நரபலி?
சேலம்: சேலம் அம்மாப்பேட்டை அருகே மாசிநாயக்கன்பட்டியில் மூன்றரை வயது மதிக்கத் தக்க பெண்குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த சுரேஷ் பாரதி ஊர் ஊராகச் சென்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். கடந்த மாதம் அயோத்தியாப்பட்டணம் வந்த அவர்கள் அங்குள்ள ரயில் நிலையத்தில் தங்கி இருந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் சுரேஷ் அவரின் மனைவி பாரதி, குழந்தை மலர்கொடி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இரவில் யாரோ குழந்தையைக் கடத்திச் சென்று இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அவர்கள், இதுகுறித்து அவர்கள் காரிப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் மாசிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் குழந்தை பிணம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில் அது சுரேஷ் பாரதி ஆகியோரின் குழந்தை என்பது தெரிய வந்தது.
சடலம் கிடந்த கிணற்றின் மேல் பகுதியில் மஞ்சள், எலுமிச்சம் பழம், பூக்கள் மற்றும் ஒரு சேலையும் இருந்தது. இதனால் யாராவது போலி சாமியார் அந்த பெண் குழந்தையை கடத்தி வந்து நரபலி கொடுத்து விட்டு பூஜை செய்து குழந்தையின் சடலத்தை கிணற்றில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விவசாய கிணற்றில் பெண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications