நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திய மாணவி… கத்தியால் குத்திய கொடூரன்
மானாமதுரை: நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளிப்போட்ட ஆத்திரத்தில் பிளஸ் 2 மாணவியான மணமகளை, 17 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திய மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். கத்திக்குத்துப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு ஆளான மாணவியின் பெயர் நந்தினி என்பதாகும். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், மானாமதுரை அருகே உள்ள சோமாத்துார் கிராமத்தை சேரந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யபட்டது. ஆனால், படிப்பை முடிக்காமல் தான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நந்தினி தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து நந்தினிக்கும், சந்திரசேகருக்கும் நடக்க இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.
திருமண கனவில் இருந்த மணமகன் சந்திரசேகருக்கு, திருமணம் நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மணமகன் சந்திரசேகர், மணமகள் நந்தினி மீது ஆத்திரம் அடைந்தார். வழக்கம்போல் புதன்கிழமையன்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக நந்தினி, தனது சைக்கிளை எடுக்க மானாமதுரை காந்தி சிலை அருகே வந்திருக்கிறார்.
நந்தினிக்காக அங்கு காத்திருந்த சந்திரசேகர், திருமணம் செய்து கொண்டு படிக்கும்படி நந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆனால் நந்தினி அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், தான் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக நந்தினியை குத்தினார்.
சந்திரசேகர் குத்தியதில் நந்தினிக்கு 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. உடனே சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்களும், சாலை பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் ஓடி வந்து நந்தினியை மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை முடிந்த நிலையில் நந்தினி, தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நந்தினியை குத்திவிட்டு தப்பி ஓடிய சந்திரசேகரை பொதுமக்களும், போலீசாரும் விரட்டி சென்று பிடித்தனர். கைது செய்யப்பட்ட சந்திரசேகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.