காங்கிரஸ் மீது மக்கள் கொண்ட கோபமே பாஜக வெற்றிக்கு காரணம்: ஞானதேசிகன்
சென்னை: வாழ்த்துக்கள் வருகையில் வெளியே வந்து தலையைகாட்டுவதும் பிரச்சனை என்று வந்தால் ஒதுங்கி கொள்வதும் தான் மோடி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய உறுப்பினரான மறைந்த லதா பிரியகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த லதாவின் உருவ படத்திற்கு கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின்போது ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டதுடன் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
லதா பிரியகுமாரும் சரி, அவரது தாய் மரகதம் சந்திரசேகரும் சரி காங்கிரஸ் கட்சிக்காக தங்களை அர்பணித்தவர்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்கள்.
காங்கிரஸின் தற்போதைய வீழ்ச்சி தற்காலிகமானது. கட்சி மீண்டும் எழுச்சி பெற்று வரும். காங்கிரஸ் மீது மக்கள் கொண்ட கோபமே பாஜக வெற்றி பெற காரணமாகிவிட்டது.
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போன்று தான் பாஜக ஆட்சி செய்கிறது. வாழ்த்துக்கள் வருகையில் வெளியே வந்து தலையைகாட்டுவதும் பிரச்சனை என்று வந்தால் ஒதுங்கி கொள்வதும் தான் மோடி. பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியதை எதிர்த்து வரும் 27ம் தேதி தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.