நாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்: உடைந்த செல்போன் பாகங்கள் மீட்பு
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜை 7 நாள் போலீஸ் காவலுக்கு பின்னர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன் சிபிசிஐடி போலீசார் இன்று மாலை ஆஜர்படுத்தினர். யுவராஜ் பயன்படுத்திய செல்போன்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 23ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை முதலில் ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின்னர் திருச்செங்கோடு டவுன் போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் (37) போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
யுவராஜின் தம்பி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த மாதம் 18ம் தேதி தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பவே, அதை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

யுவராஜ் சரண்டர்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த 11ம் தேதி சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். அவரை முதலில் போலீசார் 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

செல்போன்கள் எங்கே?
கோகுல்ராஜ் கொலைக்கு பின்பு 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த யுவராஜ் அடிக்கடி வாட்ஸ் அப்பில் ஆடியோக்களை வெளியிட்டார். இதற்கு விலை உயர்ந்த 5 ஆன்ட்ராய்டு போன்களை பயன்படுத்தியுள்ளார். அந்த செல்போன்கள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்படுகிறது.

தேடுதல் வேட்டை
மேலும் அரசு தரப்பு சாட்சியாக கோகுல்ராஜின் தோழி சுவாதியும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 23ம் தேதி தனது செல்போனை யுவராஜ் பறித்து சென்று விட்டதாக சுவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே அதை பறிமுதல் செய்ய யுவராஜை மேலும் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் பெங்களுரு, கேரளா சென்று செல்போனை தேடினர்.

கேரளாவில் செல்போன் பாகங்கள்
கேரள மாநிலம் மன்னார் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு ஈமு பண்ணையில் சில வாரங்கள் யுவராஜ் தலைமறைவாக இருந்துள்ளார். அங்கு அவர் பயன்படுத்திய செல்போனை உடைத்துள்ளார். உடைந்த செல்போன் பாகங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த நிலையில் விசாரணை முடிந்து இன்று மாலை 5.30 மணிக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கில் இதுவரை யுவராஜிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications