50 மீட்டர் உயரம்.. 83 தூண்! 905 கோடியில் தமிழகத்தின் உயரமான பாலம்.. விபத்தில்லா சாலை எங்கே தெரியுமா
சென்னை: தமிழகத்தின் உயரமான பாலம் வரப்போகிறது.. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நிலவி வந்த நீண்ட கால விபத்து அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.. தமிழகத்தின் மிக உயரமான பாலமாகக் கருதப்படும் இத்திட்டம், வனப்பகுதிகளையும் விபத்து மண்டலங்களையும் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.. 2028-க்குள் முடிக்கப்படவுள்ள இந்த நவீனப் பொறியியல் அதிசயம், "மரணக் கணவாய்" என்ற பெயரை மாற்றி விபத்தில்லா சாலையாக இப்பகுதியை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதி என்றாலே வாகன ஓட்டிகளின் மனதில் ஒருவித அச்சம் எழுவது வழக்கம். வளைவுகளும், செங்குத்தான சரிவுகளும் கொண்ட இந்தப் பாதையில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துகளும், 520-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

தர்மபுரி தொப்பூர் கணவாய்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் என்.எச். 44 சாலையில் இது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. இந்த நீண்ட காலப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், தற்போது 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் மிக உயரமான புதிய மேம்பாலச் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மிக உயரமான புதிய மேம்பால சாலை
இந்த மெகா திட்டமானது தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6.60 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைய உள்ளது. குறிப்பாக, அதிக விபத்துகள் நடக்கும் கட்டமேடு, ஆஞ்சநேயர் கோவில் வளைவு மற்றும் கணவாய் இரட்டைப் பாலம் பகுதிகளை தவிர்த்து, நேராக செல்லும் வகையில் இந்தப் பாதை அமைக்கப்படுகிறது.
2024-ல் தொடக்க ஆய்வுகள் செய்யப்பட்டு, 2025 மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது சுமார் 38 சதவீத வேலை முடிந்துள்ளது. 2028 மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தர்மபுரி தொப்பூர் பாலம்
இந்த மேம்பாலத்தின் சிறப்பு அதன் உயரம் தான். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த பாலத்தின் தூண்கள் 50 மீட்டர் உயரம் வரை செல்கின்றன. மொத்தம் 83 பெரிய தூண்களுடன் உருவாகும் இந்த உயர்மட்டப் பாலம், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக மூன்று வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது.
அதே நேரத்தில், சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வரும் வாகனங்கள் பழைய நான்கு வழிச் சாலையையே பயன்படுத்தும் வகையில், அந்தப் பகுதி ஆறு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் குறைந்து, விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது.
சூழலியல் பாதுகாப்புக்கும் இந்த திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைவதற்கான பகுதியில் சுமார் 40 சதவீதம் வனப்பகுதி இருப்பதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இயல்பாகச் செல்லும் வழிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.
மரணக் கால்வாய் விடைபெறுகிறது
அதேபோல் மூன்று இடங்களில் வனவிலங்குகள் கடந்து செல்லும் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 11 ஏக்கர் நிலமும், வனத்துறையிலிருந்து 33 ஏக்கர் நிலமும் எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உருவாகி வரும் இந்த உயர்மட்டப் பாலம், தொப்பூர் கணவாய் பகுதியின் போக்குவரத்து நிலையை மாற்றி அமைக்கும் ஒரு முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. இது நிறைவடைந்த பிறகு, "மரணக் கணவாய்" என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி பாதுகாப்பான சாலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications