மழை வருது... மழை வருது... மாணவர்களே ஜாக்கிரதை!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கிடையே இலங்கை அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், மழை கால ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
மாணவர்களின் பாதுகாப்பு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாணவர்களின் பாதுகாப்பில் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உடனடி நடவடிக்கை...
பள்ளி வளாகங்களில் திறந்தவெளி நீர்த்தேக்கங்கள் இருந்தால் அவற்றை மூடவேண்டும். பள்ளி வளாகங்களில் விழும் நிலையில் இருக்கும் மரங்களை அப்புறப்படுத்தவும், உயர் மின் அழுத்த கம்பங்கள், அறுந்து தொங்கும் நிலையில் இருக்கும் மின்கம்பிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சாதனங்கள்...
வகுப்பறைகளில் உள்ள மின் ஸ்விட்ச்கள் மழைநீர் படாத வகையில் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சிதிலமடைந்த கட்டிடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
குளங்களில் குளிக்கவேண்டாம்...
மழைக்காலத்தில் இடி, மின்னல் ஏற்படும்போது மரத்தின் கீழே ஒதுங்கக்கூடாது. வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்கள், மழைநீர் கால்வாய்களை கவனமாக கடந்துசெல்ல வேண் டும். சாலைகளில் மின் கம்பிகள் கிடந்தால் அருகில் செல்லக் கூடாது. ஆறு, ஏரி, குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தொற்றுநோய் தாக்குதல்...
பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் பாதுகாப்பது உட்பட அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நேரில் ஆய்வு...
இது சம்பந்தமாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.