ஜிஎஸ்டியில் இருந்து பாக்கெட் ஊறுகாய்க்கு முழு விலக்கு வேண்டும் : ஸ்டாலின்
சிறிய பாக்கெட் ஊறுகாய்க்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் 50 கிராம் குறைவான ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தமிழக பொட்டல ஊறுகாய் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைக்காத கிராமப்புற பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பொட்டல ஊறுகாய் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.1, ரூ.2 மற்றும் ரூ.5 ஆகிய குறைந்த விலைகளில் விற்கப்படும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தினசரி உணவுப் பழக்கவழக்கத்தில் ஊறுகாய்கள் பயன்படுத்தப்படுவதால், தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணவுத் தேவைகளில் இவை இடம் பெற்றுள்ளன.
இந்தியாவின் ஏழை மக்களில் 65 சதவீதம் பேர் பயன்படுத்தும் இந்த நுகர்பொருளை, தற்போதுள்ள ஜி.எஸ்.டி திட்டத்தில் 12 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கருணாநிதி தமிழக முதல் வராக பொறுப்பு வகித்த போது, ஊறுகாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வாட் திட்டத்தின்கீழ் முழு விலக்களித்து இருந்தது.
எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் விதத்திலும், 50 கிராம் எடைக்கும் குறைவான பாக்கெட் ஊறுகாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வரியை முழுமையாக ரத்து செய்து, ஊறுகாய் தயாரிப்பினை 0 சதவீத வரி விகிதத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு பொட்டல ஊறுகாய் உற்பத்தியாளர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதாகும்.
எனவே, 50 கிராம் ஊறுகாய் பொட்டல உற்பத்தியை ஜி.எஸ்.டி வரி விதிப்புத் திட்டத்தின் 0 சதவீத வரி விதிப்புப் பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து, ஊறுகாய் நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழை பெண்களின் நல னைப் பாதுகாக்க வேண்டும்.
இது போன்ற சிறுதொழில்களின் வெற்றியில்தான் கிராமப்புற வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், மேற்கண்ட கோரிக்கையின் மீது தாங்கள் உடனடி கவனம் செலுத்தி, சிறுதொழில் நிறுவனங்களைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications