புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா தொடங்கியது
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருப் பெயர்ச்சி விழா தொடங்கியது.
சுமார் 500ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் குருபகவான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார். இன்று இரவு 9.36 மணிக்கு குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 8மணிக்கு மக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமங்களோடு குருபெயர்ச்சி விழா தொடங்கியது. 12 மணிக்கு அபிசேகமும், ஆராதனையும், சிறப்பு பூஜைகளும், நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.
இன்று அதி காலை 3மணிக்கு கணபதி ஹோமத்தோடு பூஜைகள் தொடங்கியது. தேவார இன்னிசை, பக்தி சொற்பொழிவு, சிறப்பு அபிசேகம் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. காலை முதலே தென்மாவட்டங்களில் இருந்தும், குற்றாலம் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளும் குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் திரண்டுவந்து குரு பகவான் அருள் பெற்று சென்றவண்ணம் உள்ளனர்.
நெல்லை, தென்காசி, ராஜபாளையம்.உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து ஆலயத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கண்காணிப்பாளர் இரத்தின வேலு, உப தொகுதி அலுவலர் கெங்கமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.