எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சென்னை போலீஸில் மாணவர்கள் புகார்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை : பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தொடர்பாக எச்.ராஜாவைக் கைது செய்யக் கோரி சென்னை கமிஷனரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், பெரியார் சிலை முன்பு விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் விரைவில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தனது பதிவை எச்.ராஜா நீக்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் எச்.ராஜாவை எதிர்த்துப் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்தப்போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், எச்.ராஜா மீது மாணவர் அமைப்பினர் சென்னை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதில் மனநலம் பாதிக்கப்பட்டு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரியாரையும் தமிழக மக்களையும் அவமதித்ததற்காகப் பெரியார் சிலை முன்பு விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.