ஆசிரியர் தினம் 2020: ஆன்லைனில் ஆசிரியர் தின விழா போட்டிகள்... அசத்திய பள்ளி மாணவர்கள்
லாக்டவுன் நேரத்தில் ஆசிரியர் தினத்தை வீட்டிலேயே பள்ளி மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். ஓவியம் கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்று அசத்தியுள்ளனர்.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் ஆசிரியர் தினத்தை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும்,கவிதை சொல்லியும்,ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை பேசியும் அசத்தினார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் அனைவரையும் முடக்கிப்போட்டு விட்டது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஐந்து மாதங்களுக்கு மேலாகவே முடங்கியுள்ளனர். ஆன்லைனில் பாடம் படித்தாலும் போட்டிகளும் ஆன்லைனிலேயே வைக்கப்படுகிறது. நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகின்றனர் மாணவர்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
கொரோனாவால் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள்,செல்வமீனாள்,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.
மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல் நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும்.

ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவ படத்தை ஓவியமாக வரைந்து அசத்தினர். ஓவியம் வரைந்த அக்ஷ்யா,ஆகாஷ்,தேவதர்ஷினி.கனிகா,ஜெயஸ்ரீ,பிரதிஷா,அஜய்,ஜோயல்,சபரி,அம்முஸ்ரீ,பிரஜித் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும், சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications