நீதிபதிகள் பற்றி அவதூறு... மன்னிப்பு கேட்ட கவிஞர் வைரமுத்து : வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதற்கு கவிஞர் வைரமுத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘இறைவன் ராமர் போன்ற நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் எல்லாம் நெருப்பு போன்றவர்கள். நெருப்பாக வாழ்ந்தனர். அவர்களைப் பற்றி ஏதாவது பேசினால் நாக்கு எரிந்துவிடும். அவர்கள், ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்புவரை அப்படிதான் இருந்தனர். அந்த நேர்மையை கடைசி 6 மாதங்களில் விற்றுவிட்டால் நாட்டின் நிலை என்னவாகும்? எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கான நம்பிக்கையை உருவாக்கிவிட்டு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தவறுகளைச் செய்தால் என்ன செய்வது? சமுதாயத்தால் நீதித்துறை கவனிக்கப்படுகிறது" என்று கூறினார். வைரமுத்துவின் இந்த பேச்சு, பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
இதையடுத்து பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘வைரமுத்து தெரிவித்துள்ள கருத்து, ஓய்வு பெறும் நிலையில் உள்ள நீதிபதிகள் ஊழல் செய்கின்றனர் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. மக்களால் நீதிபதிகள், கடவுளாக போற்றப்படுகின்றனர். ஆனால் இதுபோன்ற பேச்சுகளால் அவர்கள் மீதான நல்லெண்ணம் சிதைந்து விடுகிறது. இப்படி எல்லாருமே பேசுவதற்கு அனுமதித்தால் நீதிபதிகளின் மாண்பு சிதைக்கப்பட்டு விடும். எனவே வைரமுத்து மீது நீதிமன்றம் தானாக முன்வந்து குற்ற அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து உயர்நீதிமன்றம், வைரமுத்து மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து, அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர் மற்றும் நீதிபதி பி.என். பிரகாஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைரமுத்து சார்பில் புதியதாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.