ரூ800 கோடி தார் ஊழல்- லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரூ800 கோடி தார் ஊழல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ரூ800 கோடி தார் கொள்முதல் ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சாலைகள் அமைப்பதில் தார் கொள்முதலில் ரூ800 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக தார் விலை உயர்வாக இருந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட விலையின் அடிப்படையிலேயே சாலைகள் அமைக்க கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் ரூ800 கோடி ஊழல் நடந்துள்ளது எனக் கூறி பாலாஜி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த நெடுஞ்சாலைத் துறை, தார் கொள்முதலில் ஊழலே நடைபெறவில்லை. விலை மாறுபாடுகளைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ519 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதனை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. குற்றங்களே நடைபெறவில்லை என நெடுஞ்சாலை துறையே கூற முடியாது... லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தினால்தான் தெரிய வரும். ஆகையால் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி 4 வாரத்துக்குள் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.