நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேதியை மாற்றகோரி விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை நடத்த நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தது. வரும் 15ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முறைகேடாக நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்க்கை போலியாக நடத்தப்பட்டு தேர்தல் நடக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த தேர்தலை ஞாயிறுக்கிழமை நடத்தும் வகையில் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதேதேபோல் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி பூச்சி முருகன் தனியாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். சரத்குமார் தரப்பினர் 2 வாரத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான வேட்புமனுதாக்கல் இன்று நடைபெற இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications