டெங்குவிலிருந்து விடுபட 3 நாள் நிலவேம்பு கஷாயம் அருந்த மருத்துவ அதிகாரிகள் அறிவுரை
ராஜபாளையம்: நிலவேம்பு கஷாயம் டெங்கு காய்ச்சலை சரி செய்யும். எனவே அதைக் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்று தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக் காரணமாக நேற்று வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதை டெங்கு என்று கூறாமல் மர்மக் காய்சசல் என்று அரசு கூறி வருகிறது. மாவட்ட அளவில் 300க்கும் மேற்ப்பட்டோர் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று சிவகாசி அரசு மருத்துவமனையில் சபரிகிரிவாசன், மனோஜ்குமார் என்ற இரண்டு சிறுவர்களும், சரவணன், 22, ராமசாமி, 60 உள்ளிட்ட 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்த வெற்றி வேல் மகள் சியாம்ஸ்ரீ, மாரி மணியார் சந்தை சேர்ந்த முத்துக்குமார் மகள் அபர்னா, உள்ளிட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட நகராட்சி பகுதிகளில் டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. நோயை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு, மலைவேம்பு, பப்பாளி இலைச்சாறு சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என மருத்துவ துறையினர் கூறி உள்ளனர். இதனால் நகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்க மாவட்ட நிர்வாகம் நகராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து தமிழக அரசின் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் கதிரேசன் நிருபர்களிடம் கூறுகையில்,
நாம் வசிக்கும் பகுதியின் சுற்றுப்புறத்தில் கழிவு தண்ணீர், மழைநீர் தேங்காமல் மக்கள் உடனே அப்புறப்படுத்த வேண்டும். இதனால் சுற்றுப்புறங்களை பாதுகாப்பதோடு நல்ல தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைத்து பிடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பொதுவாக குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க நிலவேம்பு கஷாயத்தை குடிக்க வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க செய்கிறது. இது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் நிலவேம்பு கஷாயம் தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க வேண்டும் என்றார் அவர்.