கொதிக்கும் வெயில்... பல மாவட்டங்களில் அனல் காற்று - வெளியே வராதீங்க என எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் பகல் நேரங்களில் வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: நாடுமுழுவதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்திலும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
104 டிகிரி வெப்பநிலை
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. குளுகுளு மாவட்டங்களான கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தொட்டுள்ள வெயில். இன்று காலையில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ட்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சதமடித்த வெயில்
பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது. கோடை மழை கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படவில்லை. மேலும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் வெயில்
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு கோடை மழை பெய்தாலும், மீண்டும் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதலே அனல் வீசுகிறது. மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூரில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை, கோவை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பகுதியில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோவை, திருப்பூரிலும் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. எனினும் இப்போது முதல் ஜூன் வரை வெயிலின் அளவு கடுமையாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த இரு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் பற்றி இந்திய வானிலை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம்
பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் மேல்மட்ட வெப்ப அளவில் பெரிய மாற்றம் இல்லை. வழக்கமான கோடை வெயிலை விட ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக இருக்கும். வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில், 0.5 டிகிரி செல்சியஸ் அளவு மட்டும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதிகம் அனல் வீசும் நேரங்களான காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பருத்தி ஆடைகளை அணியுங்கள் என்றும் இருக்கும் இடத்தை குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.