கடல் காற்று வீசுகிறது... தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்... ரமணன் தரும் 'ஜில்' நியூஸ்
சென்னை: கடல் காற்று நிலத்தை நோக்கி வீசத் தொடங்கி இருப்பதால், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தன்மை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. இப்போதே பல இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் 102 டிகிரியை தாண்டியது. சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.
இந்நிலையில், நேற்று திடீரென வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த வெயில் குறைவிற்குக் காரணம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடல்காற்று வீசாமல், தென்மேற்கு திசையில் இருந்து வீசியது. அதன் காரணமாக வெயிலின் அளவு அதிகரித்தது.
வியாழக்கிழமை (நேற்று) முதல் தெற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி இருக்கிறது. தென்கிழக்கு திசையில் இருந்தும் கடல் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை நகரிலும், கடலோர மாவட்டங்களிலும் வரும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் சற்று குறையும். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் சிறிது குறையும்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications