சென்னையில்.. குறைந்த காற்றழுத்தம் உருவானால் மேலும் மழை நீடிக்கும்.. வானிலை மையம்
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினால் மேலும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: 8 கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக அதிக கனமழை தொடரும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மேலும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை புறநகரில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
அதேபோல் வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி முதல் தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை புரட்டி எடுத்து வருகிறது.

சமையலை விடுத்து டிவியில் கவனம்
மழை பெய்ததால் தாய்மார்கள் குழந்தைகளுக்கு சமையல் செய்வதை விடுத்து டிவியில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று வருகிறார் என பார்த்த வண்ணம் இருந்தனர். எனினும் விடுமுறை இல்லை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இன்னும் மழை
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்னும் இரு நாள்களுக்கு 8 கடலோர மாவட்டங்களுக்கு கனமழையும் , அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்கள் எவை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவை யூனியன் பிரதேசத்திலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

குறைந்த காற்றழுத்தம்
ஒரு வேளை இந்த இரு நாள்களுக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் அந்த மழை மேலும் நீடிக்கும் என்றும வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த 2015 வெள்ளம் சென்னைவாசிகளின் கண்முன் மின்னல் போல் வந்து விட்டு செல்கிறது.

இன்று வரலாறு காணாத நெரிசல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதுபோல் போக்குவரத்து பாதிப்பை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்கின்றனர் சென்னைவாசிகள். இன்னும் அதிகமழை ஏற்பட்டால் போக்குவரத்து கடுமையாக பாதிக்குமே என்ற கவலை வாகன ஓட்டிகளுக்கு இப்போதே வந்துவிட்டது.












Click it and Unblock the Notifications