மேலடுக்கு சுழற்சி - இன்னும் 2 நாட்களுக்கு கனமழை கொட்டுமாம்! குடை அவசியம் மக்களே!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
Recommended Video
சென்னை : தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த 6 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னையைப் பொருத்தவரை நேற்று அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செமீ மழை பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 18 முதல் 22 சதவிகித அளவு மழை பெய்துள்ளது. இது 33 சதவிகிதம் அதிகமாகும்.
தென்மேற்கு பருவமழை
தமிழகத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட கூடுதலாக பெய்துள்ளது. வறண்டு கிடந்த கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.
கொட்டும் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை நேரத்தில் மழை கொட்டித்தீர்த்தது.
பெருக்கெடுத்த வெள்ளம்
எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், வேளச்சேரி உள்பட பகுதிகளிலும், புறநகரிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
2 நாட்களுக்கு மழை
சுமார் 2 மணி நேரம் பெய்த மழை காரணமாக சென்னையில் நேற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காணப்பட்டது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் அநேக இடங்களில் மழை பெய்ய உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலடுக்கு சுழற்சி
தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஒரு வாரம் வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குடை அவசியம்
குடையில்லாமல், மழை கோட் இல்லாமல் வெளியே சென்று நனைந்து விடாதீர்கள். மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் குடை அவசியம் மக்களே!