மழையால் தத்தளிக்கும் தமிழகம்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு
சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் விடாது அடைமழை கொட்டி வருகிறது. பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழு சென்னைக்கும், மற்றொரு குழு விழுப்புரத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று, மழை முன்னறிவிப்பை முன்னிட்டு, விழுப்புரம் சரக டிஐஜி அனிசா ஹுசைன் தலைமையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு சிதம்பரத்தில் முகாமிட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் 16,17,18 ஆகிய தேதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் பகுதிக்கு விழுப்புரம் சரக டிஐஜி அனிசா ஹுசைன் தலைமையில் பேரிடர் மீட்புக்குழு அனுப்பப்பட்டு, முகாமிட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து கமாண்டர் டி.கே.பயாசி தலைமையிலான 38 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு வந்தனர். சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்கான உபகரணங்கள் ஆகியவற்றை விழுப்புரம் சரக டிஐஜி அனிசா ஹுசைன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு மற்றும் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
இதேபோல நாகை மாவட்டம் பூம்புகார்,கொள்ளிடம் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 42 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை தந்துள்ளனர். மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அந்த குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் மீட்புக் குழுவில் 35 பேர் வீதம் 4 குழுக்களில் 140 பேர் உள்ளனர். இவர்கள் மழை, வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்கள் மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள்.