மதுரையை குளிர்வித்த கோடை மழை.. மக்கள் மகிழ்ச்சி !
மதுரை: மதுரையில் சனிக்கிழமை மாலை திடீரென அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம் சில பகுதிகளில் பணப்பட்டுவாடா ஜரூராக நடந்து வருவதால் வாக்காளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெப்பச் சூழல் மறைந்து குளிர்ந்த நிலையை மக்கள் அனுபவித்தனர். அவ்வப்போது காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை இருந்தது. கடந்த இரு நாள்களாக கடும் வெப்பம் நிலவியதுபோது அவ்வப்போது மழை பெய்ததால் நகரில் குளுமையான சூழல் நிலவியது.

சனிக்கிழமை பகலில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுவீசிய நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதனிடையே காளவாசல், டிவிஎஸ், பென்னார், முடக்குச்சாலை, நாகமலை புதுக்கோட்டை, விராட்டிபத்து, அச்சம்பத்து, பில்லர் சாலை, பைபாஸ் உள்ளிட்ட இடங்கள் இருளில் மூழ்கிய சம்பவமும் நிகழ்ந்தது. அப்போது சில இடங்களில் பணப்பட்டுவாடவும் ஜோராக நடந்ததாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோடை மழை கொட்டுகிறதோ இல்லையோ பண மழை ஒரு பக்கம் கொட்டோ கொட்டோன்னு கொட்டுகிறது.












Click it and Unblock the Notifications