கன மழை.. கால்வாயில் விழுந்த மாணவன்.. கலெக்டர் ரோகிணியை ஆவேசத்துடன் முற்றுகையிட்ட மக்கள்!
கனமழை காரணமாக மாணவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்தான்.
சேலம்: சேலத்தில் பெய்த கனமழை காரணமாக, 10-வகுப்பு மாணவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்த காரணத்தினால், ஆத்திரமடைந்த 41-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியர் ரோகிணியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நேற்றிரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அம்மாபேட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.
கால்வாயில் விழுந்து பலி
குறிப்பாக சேலம் 41-வது வார்டு பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அப்பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் ஒன்றில், 10-ம் வகுப்பு மாணவன் முகமது ஷாத் விழுந்து உயிரிழந்தான். மாணவன் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த 41-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியர் ரோகிணியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கழிவுநீரும்-மழைநீரும்
மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என அவர்கள் அப்போது கொந்தளிப்புடன் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசோக்நகர் பகுதியில் மிகுந்த மோசமான நிலைமை நிலவுகிறது. கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து வீடுகளினுள் புகுந்துள்ளதால் சுமார் 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் வெளியேறவே இல்லை
இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதி என்பதால், வீடுகளிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் தேங்கியே உள்ளது. பொருட்கள் எல்லாம் மழை நீர் மற்றும் கழிவு நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. இரவு முழுவதும் வீடுகளில் யாரும் தூங்கமுடியாமல் தவித்தனர். அவர்கள் தற்போது தங்குவதற்கும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைதவிர, சாலைகளிலும் வெள்ளமாக மழை நீர் ஓடியது. வீடுகளிலிருந்து தண்ணீரும் வெளியாறாமல் உள்ளதால், மாநகராசி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.