விடாத அடைமழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராமநாதபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை
சென்னை: காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. வெள்ளநீர் வடியாமல் உள்ளதாலும், மழை கொட்டி வருவதாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செவ்வாய்கிழமையும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரகாலமாக கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடலூரில் மட்டுமே 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும், மழை தொடர்ந்து கொட்டி வருகிறது. இதனால் கடந்த வியாழக்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமையன்று லேசாக விட்ட மழை, மீண்டும் தீவிரமடைந்து இரண்டு நாட்களாக விடாது கொட்டி வருகிறது. இதனால் புறநகர் பகுதியும், சென்னையின் தாழ்வான பகுதிகளும் வெள்ளநீரில் மிதக்கின்றன.
இதனால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை நீடிப்பதால் ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை 24 மணிநேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விடாது கொட்டி வரும் கனமழையால் கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.